எடியூரப்பா ஆட்சியில்  40,000 கோடி ஊழல்.. பதற வைத்த பாஜக எம்எல்ஏ புகார்!

Meenakshi
Dec 27, 2023,02:35 PM IST

பெங்களூரு: கடந்த எடியூரப்பா  ஆட்சி காலத்தில் 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக, பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால்,  குற்றம் சாட்டியுள்ளார். அதுவும் கொரேனா காலத்தில் இந்த ஊழல் நடந்துள்ளதாக கூறியுள்ளார். 


கர்நாடக மாநில பாஜக தலைவர் பதவியை எதிர்பார்த்திருந்தவர் பசன கவுடா. ஆனால் அப்பதவி அவருக்குக் கொடுக்கப்படவில்லை. மாறாக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனுக்கு அந்தப் பதவி போய் விட்டது. இதனால் கடுப்பில் உள்ளார் எம்எல்ஏ பசனகவுடா.


இந்த நிலையில்தான் அவர் எடியூரப்பா மீது பல குற்றசாட்டுகளை அடுக்கியதுடன் தன்னிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார். பாஜக எம்எல்ஏவின் இந்த பேச்சு பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 




இதுகுறித்து பசனகவுடா கூறுகையில், கொரோனா காலத்தில் படுக்கைகளை வாடகைக்கு எடுத்தனர். படுக்கைகளை வாடகைக்கு எடுத்ததற்கு ஒரு தொகையும், படுக்கையை கொள்முதல் செய்ததாக ஒரு தொகையும்  குறிப்பிட்டு கொள்ளையடித்தார்கள். ஒரு படுக்கைக்கு ரூ.20,000 என மதிப்பிட்டு கொள்ளையடித்தனர். அவர்கள் கொள்ளையடித்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.


கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, ரூ. 45 மதிப்பு உள்ள ஒரு மாஸ்க் ரூ.485க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகார்களுக்காக என்னை பாஜகவில் இருந்து நீக்கினாலும் நான் கவலைப்பட மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.


பசனகவுடாவின் புகார்கள் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், பாஜக ஊழல் ஆட்சியை நடத்தியது என்பதற்கு அந்த கட்சியின் எம்எல்ஏ பசனகவுடாவின் குற்றச்சாட்டுகளே ஆதாரம். அவரும் போகிற போக்கில் இதை சொல்லாமல் ஆதாரங்களையும் வெளியிட வேண்டும். கொரோனா கால ஊழல் தொடர்பாக விசாரணை ஆணையத்திடம் இந்த ஆதாரங்களை பசனகவுடா  தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.