கே.எஸ். அழகிரி.. காங்கிரஸ் தலைவராக 4 ஆண்டுகள் நிறைவு.. சத்தமில்லாமல் ஒரு சாதனை!

Su.tha Arivalagan
Feb 03, 2023,10:11 AM IST
சென்னை:  தமிழக காங்கிரஸ் தலைவர்  கே.எஸ்.அழகிரி சத்தமில்லாமல் ஒரு சாதனையைப் படைத்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் நீண்ட காலமாக காங்கிரஸ் தலைவராக இருந்தவர் என்ற சாதனைதான் அது.



காங்கிரஸ் தலைவர் பதவி என்பது  பாய்லர் மீது அமர்வது போல. கோஷ்டிப் பூசல்களில் சிக்கித் தவிக்காத காங்கிரஸ் தலைவரே கிடையாது என்று சொல்லலாம். அதிலும், வாழப்பாடி ராமமூர்த்தி, ஜி.கே.மூப்பனார் ஆகிய பெரும் தலைவர்களுக்குப் பிறகு தலைவர்களாக வந்த யாருமே நீண்ட காலம் தலைவர் பதவியில் இருக்க முடிந்ததில்லை. காரணம், இந்த கோஷ்டிப் பூசல்தான்.

ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக கே. எஸ். அழகிரி நீண்ட காலம் தலைவர் பதவியில் இருந்து சாதனை படைத்துள்ளார். 4 ஆண்டுகளை அவர் காங்கிரஸ் தலைவராக பூர்த்தி செய்கிறார். உணமையில் இது சாதனைதான்.

இந்த நான்கு ஆண்டு கால பதவிக்காலத்தில் பெரிய அளவில் எந்த எதிர்ப்பையும், சர்ச்சையையும், சலசலப்பையும் அழகிரி சந்திக்கவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று. தனது நான்கு ஆண்டு பதவிக்காலத்தில் ஒரு நாடாளுமன்றத் தேர்தல், ஒரு சட்டசபைத் தேர்தல், 2 உள்ளாட்சித் தேர்தல்களை சந்தித்துள்ளார் அழகிரி. இது இன்னொரு சாதனையாகும்.

மேலும் தனது பதவிக்காலத்தில் தமிழ்நாட்டில் பாரத் ஜோடோ யாத்திரையை காங்கிரஸ் சிறப்பாக நடத்தவும் அழகிரி காரணமாக இருந்துள்ளார்.  அழகிரி தலைவராக இருந்த இந்த காலகட்டத்தில் பெரிய அளவில் காங்கிரஸ் கட்சியில் எந்த சண்டையும் நடக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி பவனில் நடந்த ரூபி மனோகரன் தாக்குதல் அசம்பாவிதத்தைத் தவிர.  கட்சியை மிகச் சிறப்பாக பெரியஅளவில் பூசல் இல்லாமல் அழகிரி நடத்திச் செல்கிறார். அனைத்துக் கோஷ்டிகளையும் இவர் அரவணைத்துச் செல்வதால்தான் இது சாத்தியமாயிற்று என்று சொல்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த அவரது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசிய தலைவர்கள் அனைவருமே, அழகிரி கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்வதாக பாராட்டியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம். என்னதான் கட்சியை சிறப்பாக அழகிரி வழி நடத்திச் சென்றாலும் கூட பாஜகவின் வேகம் காங்கிரஸுக்கு இல்லை என்பதையும் மறுக்க முடியாது.

திமுகவைத் தாண்டி காங்கிரஸால் பெரிய அளவில் செயல்பட முடியாத நிலையும் உள்ளது.ஆனால் பாஜக அப்படி இல்லை. எல்லாவற்றிலும் கில்லி போல அது வேகம் காட்டுகிறது. ஆனால் காங்கிரஸோ, கூட்டணி தர்மம் என்றெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது.மேலும் பாஜக போல எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட முடியாது. காங்கிரஸ் கட்சிக்கென்று பாரம்பரியம் உள்ளது. அதை விட்டுத் தர முடியாது என்றும் காங்கிரஸார் விளக்கம் தருகின்றனர்.