பிரதம மந்திரி  வீட்டு வசதி கடனை வாங்கிக் கொண்டு.. கள்ளக்காதலர்களோடு கம்பி நீட்டிய 4 பெண்கள்!

Su.tha Arivalagan
Feb 09, 2023,02:02 PM IST
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நான்கு  பெண்கள், மத்திய அரசின், பிரதம மந்திரி வீட்டு வசதிக் கடனை வாங்கிக் கொண்டு, தங்களது கள்ளக்காதலர்களோடு தப்பி ஓடிய செயல் அந்த மாநிலத்தை அதிர வைத்துள்ளது.



மத்திய அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றுதான் இந்த பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம். இதன் கீழ் பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்கள், கீழ் மற்றும் நடுத்தர வருமானப் பிரிவினருக்கு வீடு கட்ட கடன் உதவி அளிக்கப்படும்.  பயனாளிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கிலேயே இந்தப் பணம் வரவு வைக்கப்பட்டு விடும். இந்த கடனைப் பெற்றுக் கொண்டுதான் இந்த நான்கு பெண்களும் கணவர்களை உதறி விட்டு கள்ளக்காதலர்களோடு தப்பி ஓடியுள்ளனர். 

இந்த நான்கு பெண்களுக்கும் முதல் கட்டமாக தலா ரூ. 50,000 வங்கிக் கணக்கில் வந்துள்ளது. அந்தப் பணத்தை வழித்தெடுத்துக் கொண்டு இவர்கள் ஓடி விட்டனர். இதனால் கணவர்மார்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்போது அவர்களுக்கு 2 விதமான பிரச்சினை வந்துள்ளது. வீட்டுக் கட்டுமானத்தை இன்னும் அவர்களால் ஆரம்பிக்க முடியவில்லை.  அடுத்து பணம் கைக்கு வந்து சேரவில்லை. இதனால் என்னாகுமோ என்ற குழப்பத்தில் உள்ளனர்.

அதை விட பெரிய குழப்பம் என்னவென்றால், அடுத்த தவணை பணத்தை அதிகாரிகள் வங்கிக் கணக்கில் போட்டு விட்டால், அதையும் தங்களது  மனைவிமார்கள் எடுத்து விடுவார்களே என்ற அச்சத்திலும் இவர்கள் உள்ளனர். இதையடுத்து திட்ட அதிகாரியை நேரில் சந்தித்து அடுத்த தவணை பணத்தைப் போடாமல் நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனராம்.

பாரபங்கி மாவட்டத்தில் உள்ள சித்தார் என்ற நகரில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட நான்கு பெண்களுக்கும் முதல் தவணைப் பணம் வரவு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டுமானம் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிவதற்காக அதிகாரிகள் வந்து ஆய்வு செய்துள்ளனர். ஆனால் கட்டுமானப் பணிகளே நடைபெறவில்லை என்பதை அறிந்து என்னவென்று விசாரித்தபோதுதான் அவர்கள் காதலர்களுடன் எஸ்கேப் ஆனதும், கணவர்கள் தலையில் துண்டைப் போட்டு உட்கார்ந்திருப்பதும் தெரிய வந்தது.

இப்போது முதல் தவணைப் பணத்தை எப்படி திரும்பப் பெறுவது என்ற குழப்பத்தில் அதிகாரிகள் உள்ளனராம்.