இடுப்பில் தூக்கிக் கொண்ட டாக்டர் தமிழிசை.. ஒட்டிக் கொண்ட குழந்தை.. அம்மா கெஞ்சியும் போகலியே!

Su.tha Arivalagan
Dec 25, 2023,05:44 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு இன்று வருகை தந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், 4 மாதக் குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு நடந்து போனார். திரும்பப் போகும்போது குழந்தை அதன் அம்மாவிடம் போக மறுத்து, கவர்னரிடமே ஒட்டிக் கொண்டதால் அந்த இடமே கலகலப்பானது.


தூத்துக்குடிக்கு இன்று டாக்டர் தமிழிசை வருகை தந்தார். அங்கு வெள்ளம் பாதித்த பொட்டல்காடு, முருகேசன் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார். அவர்களிடம் என்ன மாதிரியான பாதிப்புகளைச் சந்தித்தீர்கள் என்று கேட்டறிந்தார்.


மேலும் அங்குள்ள மக்களுடன் அமர்ந்து காலை உணவையும் அருந்தினர். அந்த சமயத்தில், அவர் ஒரு வீட்டில் ஒரு அம்மாவிடம் இருந்த 4 மாத ஆண் குழந்தையை வா என்று கூப்பிட அதுவும் வேகமாக வந்து விட்டது. உடனே அதை  இடுப்பில் தூக்கியபடி அவர் அந்தப் பகுதியை வலம் வந்தார். குழந்தை நல்லா ஒட்டிக்கிருச்சு என்று தன்னுடன் வந்தவர்களிடம் சந்தோஷமாகக் கூறினார்.




அந்தப் பகுதியை சுற்றிப் பார்த்து விட்டு திரும்ப அந்தத் தாயாரிடம் குழந்தையுடன் வந்தார் தமிழிசை. அந்தக் குழந்தையின் அம்மா, வாடா என்று கையை நீட்ட, அந்தக் குழந்தையோ நன்றாக சிரித்தபடி திரும்ப தமிழிசையின் பக்கமே போனது. திரும்பத் திரும்ப அம்மா கூப்பிட்டும் போகலை.. இதைப் பார்த்த தமிழிசைக்கு ரொம்பப் பெருமையாக போய் விட்டது. வர மாட்டான் என்று  சிரித்தபடி குழந்தையின் அம்மாவிடம் கூறினார். பின்னர் குழந்தையைத் தாயாரிடம் கொடுத்து விட்டு தலையைத் தடவிக் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார் டாக்டர் தமிழிசை.


அன்புள்ள அக்காவாக தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் போகும் இடமெல்லாம் அறியப்படும் டாக்டர் தமிழிசை, இன்று ஒரு குட்டிக் குழந்தையிடம் தாய்ப்பாசத்தையும் வெளிப்படுத்திச் சென்றார்.