முடிஞ்சிருச்சு லீவு.. தொடர் விடுமுறைக்கு பின்னர் 4 மாவட்ட பள்ளி கல்லூரிகள் திறப்பு

Meenakshi
Dec 11, 2023,05:30 PM IST

சென்னை: கடந்த ஒரு வார காலமாக தொடர் விடுமுறையில் இருந்த சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன.


மிச்சாங்  புயல் வந்த நாள் முதல் நேற்று வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. தண்ணீர் வடிவதில் காலதாமதம் மற்றும் பள்ளிகளில் பராமரிப்பு பணி உள்ளிட்ட காரணங்களுக்காகவும், தேங்கியுள்ள தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், தொற்று நோய் அபாயம், போன்ற பல காரணங்களுக்காக மழை நின்ற பின்னரும் விடுமுறை விடப்பபட்டது.


இந்நிலையில் அரசு மற்றும் தன்னார்வலர்களின்முயற்சியினால்  நிலைமை  சீராகி இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு வார விடுமுறைக்குப் பின்னர் பள்ளிக்கு வந்த மாணவர்கள் தங்களது நண்பர்களையும், ஆசிரியர்களையும் கண்டு மகிழ்ந்தனர். பள்ளிக்கூடங்களில் பல்வேறு துப்புறவுப் பணிகள் நடத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டிருந்தது.




முன்னதாக பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் உரிய ஏற்பாடுகள் செய்ய பள்ளி கல்வித்துறை கடந்த 9ம் தேதி உத்தரவிட்டிருந்தது. பள்ளி வளாகங்கள் முழுமையாக தூய்மை செய்ய வேண்டும். உடைந்த பொருட்கள் மற்றும் கட்டிட இடிபாடுகளை அகற்ற வேண்டும். மேலும் பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். மின் இணைப்புகள் உள்ளிட்டவற்றை சரிசெய்ய வேண்டும் என்று 4 மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிகல்வித்துறை இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.


அதன்படி அனைத்தும் செய்யப்பட்டிருந்தது. மேலும், இன்று திறக்கப்படும் பள்ளிகளுக்கு சில விதிமுறைகளை தமிழக அரசும் அறிவித்திருந்தது. குறிப்பாக மின்கசிவு பிரச்சனை இருந்தால் அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும். பள்ளி வளாகங்கள் முழுமையாக தூய்மை செய்யப்பட வேண்டும். சுற்றுச்சுவர்களில் ஈரப்பதம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதால் அவற்றிற்கு அருகே செல்ல அனுமதிக்கக் கூடாது. கட்டிட மேற்கூரைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். பாதுகாப்பான சுகாதாரமான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். என தமிழக அரசு சார்பிலும் சில விதிமுறைகள் கூறப்பட்டிருந்தது.