கிருஷ்ணகிரி அருகே பட்டாசு கிட்டங்கியில் பயங்கர விபத்து.. 7 பேர் பலி

Su.tha Arivalagan
Jul 29, 2023,10:38 AM IST
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பழைய பேட்டை என்ற இடத்தில் உள்ள பட்டாசு கிட்டங்கியில் ஏற்பட்ட மிகப் பெரியதீவிபத்தில் 7 பேர் உடல் கருகி பலியானார்கள்.

கிருஷ்ணகிரி அருகே பழைய பேட்டை என்ற இடத்தில் ஒரு பட்டாசு கிட்டங்கி உள்ளது. முறைப்படி அனுமதி வாங்கியே இது செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த கிட்டங்கி அருகே ஏராளமான வீடுகளும்  உள்ளன.

இந்த நிலையில் இன்று காலை திடீரென பட்டாசு கிட்டங்கியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்துச் சிதறி பெரும் தீபிடித்துக் கொண்டது. இதில் 7 பேர் உடல் கருகி பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மீட்கப்பட்டுள்ளனர்.



கிட்டங்கி அருகே உள்ள வீடுகளுக்கும் தீ பரவியதால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். அந்தப் பகுதியே பெரும் போர்க்களம் போல காணப்படுகிறது. மக்கள் அலறி அடித்து ஓடியபடி இருந்தனர். சூளகிரி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்ரும் பலமாக வீசி வருவதால் தீயை அணைப்பது சிரமமாக உள்ளது.

மீட்புப் பணி விரைவாக நடந்து வருகிறது. மேலும் யாரேனும்உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சம்பந்தப்பட்ட பகுதிக்கு போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.  உயர் அதிகாரிகளும் விரைந்துள்ளனர்.