4 days work.. விரைவில் ஜப்பானிலும் 4 நாட்கள் வேலை திட்டம் அறிமுகம்... எதற்கு தெரியுமா?

Meenakshi
Dec 10, 2024,05:50 PM IST

டோக்கியோ: ஜப்பானில் விரைவில் 4 நாட்கள் வேலை திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது. இது எதற்காக தெரியுமா?  ஜப்பானில் வேகமாக குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த தான் இந்த திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சமீபகாலமாக வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நல பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதாகவும், அத்துடன் மன அழுத்தமும் அதிகரித்து வருவதாக பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் புலம்பி வருகின்றனர். மணிக்கணக்காக வேலை பார்ப்பது, ரெஸ்ட் எடுக்காமல் வேலை பார்ப்பது, சாப்பாடு, தூக்கத்தை மறந்து வேலை பார்ப்பது என்று பல காரணங்களால் மனிதர்களின் இயல்பான வாழ்க்கை முறையே மாறி மெஷின்கள் போல மாறி விட்டோம்.




இதற்கு என்ன தீர்வு என்று யோசித்த நிலையில், பல்வேறு நாடுகள் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளன. அதன்படி வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் தான் வேலையாம். மற்ற 3 நாட்கள் விடுமுறையாம். ஆனால், சம்பளமும் முழு சம்பளமாம். இந்தத் திட்டத்தை தான் தற்பொழுது பெரும்பாலான நாடுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.


ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா,பெல்ஜியம், பிரேசில், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்த், அயர்லாந்து, நெதர்லாந்து, நியூஸ்லாந்து, நார்வே, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து,அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளில் பல நாடுகளில் இந்த 4 நாட்கள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் உடல்  மற்றும் மனம் நலம் பெறுவதுடன். குறைந்த நேரத்தில் வேலை செய்வதால் வேளை செய்பவர்களும் உற்சாகத்துடன் அதிகமான வேலைகளை செய்வதாக கருதுகின்றனர்.


இந்த நிலையில் 2021ம் ஆண்டு முதல் ஜப்பான் அரசும் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்று பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக, சமீபகாலமாக ஜப்பானில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். அது மட்டுமின்றி ஜப்பானில் பிறப்பு விகிதமும் குறைந்து வருகிறதாம்.இப்படியே சென்றால் எதிர் காலத்தில் வேலை செய்வதற்கு கூட ஆட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடுமாம். இதன் காரணமாகவே வேலை நாட்களை ஜப்பான் அரசும் குறைக்க தற்போது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இந்த  நடைமுறைகளை கொண்டு வருவது ஒரு புறம் என்றால், பெரும்பாலான ஜப்பான் ஊழியர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையும் இருந்து வருகிறது. ஏன் என்றால் ஜப்பான் மக்கள் நீண்ட நேரம் தீவிரமாக வேலை செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இதுதான் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது. ஆனால், தற்போது அதுவே அந்த நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.


எது எப்படியோ, 2025ம் ஆண்டு ஏப்ரல் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் ஊழியர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவார்கள், அவர்களின் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. எல்லாம் சரி தான் நம் நாட்டிற்கு இத்திட்டம் எப்போது வரும் என்று தான் தெரியவில்லை. ஆனால் நம்ம ஊரில் பிறப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டே போவதால் பேசாமல் ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷனைதான் கட் செய்ய வேண்டும் போல!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்