மகா கும்பமேளா முடிய இன்னும் 4 நாட்கள் தான்: பிரயாக்ராஜ்ஜில் அலைமோதும் பக்தர்கள்
லக்னோ: மகா கும்பமேளா பிப்., 26ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிரயாக்ராஜ் செல்ல ரயில் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் வந்துள்ள கும்பமேளா நிகழ்ச்சி 144 வருடங்களுக்குப் பிறகு வரும் கும்பமேளாவாகும். இந்த கும்பமேளா கடந்த மாதம் ஜனவரி 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி நிறைவடைகிறது. பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இதுவரைக்கும் 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
இதில் நீராடினால் பக்தர்கள் சிவலோகப் பதவியை அடைவார்கள் என இந்துக்கள் கருதுகின்றனர். பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டும் வருகின்றனர்.
இந்தநிலையில், உலகின் மிக பெரிய ஆன்மீக ஒன்றுகூடலான இந்த மகா கும்பமேளா முடிவுக்கு வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பக்தர்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மகா கும்பமேளாவில் பங்கேற்று நீராட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாலும், கும்பமேளாவில் நீராடியவர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதாலும் பிரயாக்ராஜ் ரயில், பேருந்து உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது.