திருப்பதி மலைப் பாதையில்.. 3வது சிறுத்தை சிக்கியது!

Su.tha Arivalagan
Aug 17, 2023,12:18 PM IST
திருப்பதி: ‌ திருப்பதி மலைப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கூண்டில் 3வது முறையாக சிறுத்தை சிக்கியுள்ளது.
     
ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லுரை சேர்ந்த ஆறு வயது சிறுமி லக்ஷிதா தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் திருப்பதி மலைப்பாதையில் பாதயாத்திரை சென்றார். அப்போது திடீரென அந்த குழந்தை காணவில்லை. பெற்றோர் திருப்பதி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் சிறுமியைத் தேட ஆரம்பித்தனர் ஆனால் சிறுமி கிடைக்கவில்லை. 

மறுநாள் காலையில் சிறுமி நரசிம்ம சுவாமி சன்னதி அருகில் சடலமாக மீட்கப்பட்டார். பாதி உடல்தான் கிடைத்தது. சிறுமி சிறுத்தை தாக்கி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  
இதன் விளைவாக திருப்பதியில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும் திருப்பதியில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்பட்டது.

12 வயதிற்குட்பட்டோருக்கு காலையில் 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே நடைபயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. சிறுமியை தாக்கிய சிறுத்தையை பிடிப்பதற்காக ஆங்காங்கே கூண்டுகள் அமைக்கப்பட்டன. அதில் இதுவரை 2 சிறுத்தைகள் சிக்கிய நிலையில் தற்போது 3வது சிறுத்தையும் சிக்கியுள்ளது. நான்கு நாட்களில் 3 சிறுத்தைகள் சிக்கியதால் மக்களிடையே பீதியும் நிலவுகிறது.

அடுத்தடுத்து சிறுத்தைகள் சிக்குவதால் அடுத்து என்ன பண்ணலாம் என்று தேவஸ்தானம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. திருப்பதியில் மலை ஏறும் சாலையில் கம்பி வேலி அமைத்துள்ளனர். அதே  போன்ற கம்பி வேலியை நடைபயணம் செய்யும் இடத்தில் அமைத்தால் மக்கள் சற்று பயம் இல்லாமல் நிம்மதியுடன் வரலாம் என்று பக்தர்கள் கருதுகிறார்கள்.