அயர்லாந்து பிரதமராக பொறுப்பேற்கிறார் சைமன் ஹாரிஸ்.. ஜஸ்ட் 37 வயதுதான்!

Su.tha Arivalagan
Mar 25, 2024,10:40 AM IST

டப்ளின்: அயர்லாந்து நாட்டின் தலைவராக அதாவது பிரதமராக பதவியேற்கவுள்ளார் 37 வயதேயானா சைமன் ஹாரிஸ். இவர்தான் அயர்லாந்து நாட்டின் பிரதமர் பதவியை ஏற்கவுள்ள மிகவும் இளம் வயது தலைவர் ஆவார்.


இதுவரை பிரதமராக இருந்து வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரட்கர் பதவி விலகியதைத் தொடர்ந்து சைமன் ஹாரிஸ் புதிய பிரதமராகியுள்ளார். லியோ வரட்கரின் தந்தை பெயர் அசோக் வரட்கர். இவர் மும்பையைச் சேர்ந்தவர் இளம் வயதிலேயே அயர்லாந்தில் செட்டிலானவர். அங்கு திருமணமும் செய்து கொண்டு அயர்லாந்திலேயே செட்டிலாகி விட்டார். ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக பகிரங்கமாக கருத்து தெரிவித்தவர் வரட்கர் என்பது குறிப்பிடத்தக்கது.




அயர்லாந்தில் பைன் கேயல் கட்சி  தலைமையிலான கூட்டணிதான் ஆட்சியில் உள்ளது. பைன் கேயல் கட்சியின் தலைவராக இருப்பவர்தான் பிரதமர் பதவியிலும் இருப்பார். இதுவரை லியோ வரட்கர் கட்சித் தலைவராகவும், பிரதமராகவும் இருந்தார். இரு பதவிகளையும் அவர் ராஜினாமா செய்துள்ளதால் புதிய தலைவராக சைமன் ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 37 வயதாகும் இவர்தான் அயர்லாந்து நாட்டின் மிகவும் இளம் வயது பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து சைமன் ஹாரிஸ் கூறுகையில், இது எனது வாழ்க்கையில் கிடைத்த மாபெரும் கவுரவம் என்று தெரிவித்துள்ளார். ஏப்ரல் ஒன்பதாம் தேதி சைமன் ஹாரிஸ் அயர்லாந்து நாட்டின் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். அவருக்கு பைன் கேயல் கூட்டணியின் கட்சிகள் ஹாரிஸ் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதுகுறித்து பைன் கேயல் கட்சியின்  துணைத் தலைவரான சைமான் கோவனி கூறுகையில் மிகவும் சிறப்பான தேர்வு இது. மிகச்சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார் சைமன் ஹாரிஸ். எனவே அவரது தேர்வு மிகச் சரியானது என்று தெரிவித்தார்.


கட்சி உறுப்பினர்கள் மத்தியில் சைமன் ஹாிஸ்  பேசுகையில் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் மனிதநேயத்துடனும் நான் செயல்படுவேன். ஒரு கட்சித் தலைவராக மட்டுமல்லாமல் நாட்டின் தலைவராகவும் நான் மிகச் சிறந்த ஒரு பங்களிப்பை கொடுக்க திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்தார். சர்வதேச அளவில் ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து சைமன் ஹாரிஸ் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தவர். உக்ரைனுக்குள் புகுந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவது சட்டவிரோதமானது கொடுமையானது என்று வர்ணித்துள்ளார் சைமன் ஹாரிஸ். அதேபோல காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கு முன்பு சைமன் ஹாரிஸ் கல்வி அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். குறிப்பாக கொரோனா காலத்தில் இவரது செயல்பாடுகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.