எக்ஸ்டா ரெய்த்தா கேட்ட இளைஞர்.. சரமாரியாக அடித்துக் கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்!

Su.tha Arivalagan
Sep 12, 2023,09:39 AM IST
ஹைதராபாத்: பிரியாணி சாப்பிடச் சென்ற இளைஞர், கூடுதலாக ரெய்த்தா கேட்டதால் ஹோட்டல் ஊழியர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது சண்டையில் முடிந்தது. ஹோட்டல் ஊழியர்கள் அந்த இளைஞரை சரமாரியாக அடித்து உதைத்ததில் படுகாயமடைந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

ஹைதராபாத்தில் மிகப் பிரபலமான மெரிடியன் ரெஸ்டாரென்ட் என்ற ஹோட்டலில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்ட நபரின் பெயர் லியாகத் என்று தெரிய வந்துள்ளது. இவர் தனது நண்பர்களுடன் இந்த ஹோட்டலுக்கு சாப்பிட வந்துள்ளார். அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது லியாகத் எக்ஸ்ட்ரா ரெய்த்தா கேட்டுள்ளார். அப்போது அவருக்கும், ஹோட்டல் ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அந்த ஊழியருக்கு ஆதரவாக பிற ஹோட்டல் ஊழியர்களும் வந்து விடவே அது பெரிய சண்டையாக மாறியது. இரு தரப்பும் மோதிக் கொண்டனர். இதில் ஹோட்டல் ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து லியாகத்தை கடுமையாக தாக்கினர். தகவல் அறிந்து போலீஸார் இரு தரப்பையும் விலக்கி விட்டனர். 

ஹோட்டல் மேனேஜர் உள்ளிட்ட ஊழியர்கள் லியாகத்தை மிகக் கடுமையாக தாக்கியது சிசிடிவி கேமரா பதிவின் மூலம் தெரிய வந்துள்ளது. பஞ்சகுட்டா போலீஸார் இரு தரப்பையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு வைத்து சமரசம் பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தனர். அந்த சமயத்தில் திடீரென லியாகத் தனக்கு மூச்சுத் திணறுவதாகவும், நெஞ்சு வலிப்பதாகவும் கூறி மயங்கி விழுந்தார்.

அதிர்ச்சி அடைந்த போலீஸார்  உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு லியாகத்தைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு லியாகத் இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். கடுமையாக தாக்கப்பட்டதால் லியாகத்துக்கு இதய அதிர்ச்சி ஏற்பட்டு அது செயலிழந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 

போலீஸார் தற்போது லியாகத் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.