மணிக்கு 30 கி.மீ வேகம்தான்.. நாளை முதல் அலார்ட் மக்களே.. புதிய வாகன வேக வரம்பு அமல்!

Meenakshi
Nov 03, 2023,03:07 PM IST

சென்னை: 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய வாகன வேக வரம்பு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. 


இதுகுறித்து, சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


சென்னை பெருநகரத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வாகன ஓட்டிகள் வேக வரம்பை கடைபிடிப்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது சென்னையில் மட்டும் 62.5 லட்சம் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சாலையைப் பயன்படுத்துபவர்கள் போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்றுவது பாதுகாப்பான போக்குவரத்து சூழலுக்கு வழி வகுக்கும். 




இதனால், வேக வரம்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சென்னை மாநகரில் பல்வேறு வகை வாகனங்களுக்கு 2003ல் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மறுமதிப்பீடு செய்து வேக வரம்பினை மாற்றியமைக்க வேண்டும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அமைத்தார்.


இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகியவற்றில் நகரங்களில் வேக வரம்பு மற்றும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை போன்ற காரணிகளை ஒப்பீட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது. மேலும், சென்னை பெருநகரில் உள்ள சாலைகளின் வகை மற்றும் பல்வேறு வாகன வகைகள் மற்றும் இடங்களுக்கான வேக வரம்புகள் குறித்து இக்ககுழு பரிந்துரை செய்தது.


இலகு ரக வாகனங்கள் 60 கி.மீ.


அதன்படி, இலகு ரக வாகனங்கள் மணிக்கு 60 கி.மீரும், கனக ரக வாகனங்கள் மணிக்கு 50 கி.மீரும், இரு சக்கர வாகனங்கள் மணிக்கு 50 கி.மீரும், ஆட்டோ மணிக்கு 40 கி.மீரும் செல்ல பரிந்துரைத்தது.    குடியிருப்புப் பகுதிகளில் (Residential areas) அனைத்து வாகனங்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டர் வரை இருக்க வேண்டும் என்றும் வரம்புகளை நிர்ணயித்தது. மேற்கண்ட,  வாகன வேக வரம்புகளை அமல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. எனவே இந்த ஒப்புதல் செய்யப்பட்ட நிர்ணயமானது 04.11.2023 முதல் அமலுக்கு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.




சென்னையில் வேக வரம்பை மீறி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேக வரம்பை மீறி செல்லும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு ரூ. 1000 அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் வேக வரம்பை மீறினால் ரூ. 2000 அபராதம் விதிக்கப்படுகிறது. வேக வரம்பை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளுக்கு ஏ. என். பி. ஆர் கேமரா மூலம் அபராதம் செலுத்தப்படும். வரும் 4ம் தேதி முதல் வாகனங்கள் வேக வரம்பு அமல் படுத்தப்படும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.