தவறான தகவல் பரப்பினால் 3 ஆண்டு சிறை.. மத்திய அரசு அதிரடி

Aadmika
Aug 12, 2023,03:49 PM IST

டில்லி : பொய்யான செய்திகள் அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்களை பரப்பினால் 3 ஆண்டு வரை சிறை தண்டனை பெற்று தரும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கான சட்ட மசோதா நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.


மத்திய அமைச்சர் அமித் ஷா, நேற்று பாரதிய நியாய சன்கிதா என்ற சட்ட மசோதாவை தாக்கல் செய்தால். அதில் இந்திய குற்றவியல் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாகவும் அதற்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய சட்டங்கள் கொண்டு வரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி,195 வது சட்டப் பிரிவின் படி, தவறான தகவல்கள், செய்திகள் ஆகியவற்றை பொதுவெளியில் பரப்பினால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் வழிவகை செய்வதாக தெரிவித்தார். 




இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை அல்லது பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை பதிவிட்டாலோ அல்லது பரப்பினாலோ 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். பொது அமைதிக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலான சட்ட மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமித்ஷா இதனை தெரிவித்துள்ளார். 


இந்திய குடிமக்களுக்கு அளிக்கப்படும் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான 3 சட்ட மசோதாக்களை அமித்ஷா நேற்று தாக்கல் செய்தார். பாரதிய நியாய சன்கிதா, பாரதிய நகாரிக் சுரக்ஷா சன்கிதா, பாரதிய சக்ஷ்யா ஆகிய 3 சட்ட மசோதாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.