போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!

Manjula Devi
Apr 22, 2025,06:41 PM IST

டெல்லி: போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, நாடு முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.


கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த திங்கட்கிழமை உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் இரங்கலை பதிவிட்டுள்ளார்.




இந்த நிலையில் போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி நாடு முழுவதும் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கபடும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,


கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை, ஏப்ரல் 21,  2025 அன்று காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்தியா முழுவதும் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.


அதன்படி, இன்றும், நாளையும்  இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இறுதிச் சடங்கு நாளில், ஒரு நாள் மாநிலம் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும். இந்த நாட்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும், அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என அதில் கூறப்பட்டுள்ளது.