பொங்கல் + குடியரசு தினம்.. கடைகளை மூடுங்கப்பா.. டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை!

Meenakshi
Jan 13, 2024,05:52 PM IST

சென்னை: ஜனவரி 16, 25, 26 ஆகிய 3 நாட்கள் தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்கள், கிளப்புகள் அனைத்தும் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்பொழுது பொங்கல் கொண்டாட்டம் களை கட்ட தொடங்கியுள்ளது. ஜனவரி 14ம் தேதி போகி, 15ம் தேதி பொங்கல், 16ம் தேதி மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணுப் பொங்கல் என கொண்டாட உள்ள நிலையில், பொங்கல் கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில்  டாஸ்மாக் கடைகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது.  பொங்கலுக்கு அடுத்த நாள் திருவள்ளுவர் தினம் வருவதால் ஜனவரி 16ம் தேதி விடுமுறையும்,  ஜனவரி 25ம் தேதி வள்ளலார் தினத்தை முன்னிட்டு விடுமுறையும், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜனவரி மாதத்தில் மட்டும் மொத்தம் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாடு மதுபானம் விதிகள் 1982ன் படி அனைத்து இந்திய தயாரிப்பு மதுபான கடைகள் (டாஸ்மாக்). அயல் நாட்டு மதுபான கடைகள் (எலைட்), மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (பார்) ஆகியவை 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 25ம் தேதி வியாழக்கிழமை 26ம் தேதி வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று தினங்களில் நாள் முழுவதும் மூடப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

மதுக் கடைகள் 3 நாட்களுக்கு மூடப்படவுள்ளதால் மதுவை வாங்கி ஸ்டாக் வைத்துக் குடிக்க குடிமகன்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் இந்த மூன்று நாட்களுக்கும் முதல் நாள் கூடுதலாக கூட்டம் அலை மோதும் என்று தெரிகிறது.