Tamil Nadu Heavy Rain warning: இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

Manjula Devi
Sep 26, 2024,02:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாகவே பரவலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் வட தமிழக பகுதிகளில் படிப்படியாக வெயில் குறைந்து மாலை இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. அதே வேளையில் தென் மாவட்டப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில்  இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி வரை வெப்பநிலை உயர்ந்து வந்தது. இந்த வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் செய்வதுதறியாமல் திகைத்து வந்தனர்.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 26, 28, 29 ஆகிய மூன்று தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ‌




இன்று கனமழை:


தமிழ்நாட்டில் நேற்று பல இடங்களில் கன மழை பெய்த நிலையில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கள்ளக்குறிச்சி,சேலம் ஆகிய  மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


நாளை மறுநாள் கன மழை: 


கோவை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர்,தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய 19 மாவட்டங்களில் நாளை மறுநாள் அதாவது 28ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


29ஆம் தேதி கன மணிக்கு வாய்ப்பு: 


கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய 10 மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.




முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - தமிழக அரசு உத்தரவு


தமிழ்நாட்டில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், இந்த காலகட்டத்தில் கனமழையை திறம்பட எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் கன மழை பெய்தால் பாதிக்கப்படும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.


மக்களும் கூட வட கிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளத் தேவையான ஆயத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். குறிப்பாக பள்ளமாக உள்ள பகுதிகளில் வசிப்போர் கடந்த கால அனுபவங்களை வைத்து அதற்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்துள்ளனர். 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்