ஏமாற்றிய பாய்ஃபிரண்ட்.. ஜெயிலுக்கு அனுப்பிட்டு ஊர் சுற்ற கிளம்பிய சீன காதலிகள்!

Su.tha Arivalagan
May 31, 2023,03:07 PM IST
பீஜிங் : காதலிப்பதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய காதலனை மூன்று பெண்கள் சேர்ந்து போலீசில் சிக்க வைத்து, ஜெயிலுக்கு அனுப்பி விட்டு ஜாலியாக ஊர் சுற்ற கிளம்பிய சுவாரஸ்ய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. 

சென் ஹாங் என்ற சீன பெண், ஷிவாய் என்பவரை காதலித்து வந்துள்ளார். காதலனின் நடவடிக்கைகளால் சந்தேகமடைந்த சென் ஹாங், ஷிவாய் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அவரது மொபைல் போனை எடுத்து சோதனை செய்துள்ளார். அதில் மற்றொரு பெண்ணிடம் இருந்து ஏரளமான மெசேஜ்கள் வந்திருப்பது தெரிந்தது. தனது கால்களை எதற்காக தொடர்ந்து தவிர்க்கிறீர்கள் என அந்த பெண் அனுப்பிய மெசேஜை பார்த்து ஷாக்கான சென், மெசேஜ் அனுப்பிய அந்த பெண்ணிற்கு கால் செய்து பேசி உள்ளார்.



மெசேஜ் அனுப்பிய பெண்ணின் பெயர் ஷியோ ஃபேன் என்பது தெரிய வந்தது. அவர் ஷிவாயை காதலித்து வந்ததும், இருவரும் இரவு நேரங்களில் பல மாதங்களாக ஒன்றாக தங்கி இருந்ததும் தெரிய வந்தது. சென், ஷி யோ இருவரையும் ஷிவாய் திருமணம் செய்து கொள்ள விரும்பியது தெரிய வந்ததும் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதோடு முடிந்த விடவில்லை, பிப்ரவரி 10 ம் தேதி ஜயோ லின் என்ற மூன்றாவது பெண் சென்னிற்கு போன் செய்துள்ளார். தானும் ஷிவாயின் காதலி என சொல்லி மேலும் அதிர்ச்சி அளித்துள்ளார்.

மூன்று பெண்களும் நேரில் சந்தித்து பேசிய போது தான் ஷிவாய், மூன்று பெண்களையும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரிய வந்தது. உண்மை அனைத்தையும் தெரிந்து கொண்ட மூன்று பெண்களும், ஷிவாயிடம் சென்று தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தரும் படி கேட்டுள்ளனர். ஆனால் ஷிவாய் மறுத்ததால் மூன்று பேரும் போலீசில் சென்று புகார் அளித்துள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் 2020 ம் ஆண்டே ஷிவாய் வேலையை விட்டு நின்றுள்ளார். வேலையில்லாமல் இருந்த அவர், தனது கடனை அடைப்பதற்கு பணம் தேவைப்பட்டதால் இந்த மூன்று பெண்களையும் காதலிப்பதாக சொல்லி, அவர்களிடம் இருந்து இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டதட்ட ரூ.12 லட்சம் வரை ஏமாற்றி உள்ளார். 2021 ம் ஆண்டு முதல் மூன்று பெண்களுடனும் டேட்டிங்கில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஷிவாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் விபரங்கள் தெரிய போலீஸ் அதிகாரி அந்த பெண்களுக்கு போன் செய்துள்ளார். ஆனால் காதலனின் தில்லுமுள்ளு வேலைகளை கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கிய போது 3 பெண்களும் நல்ல ஃபிரண்ட்ஸ் ஆகி விட்டார்களாம். தற்போது மூன்று பெண்களும் சேர்ந்து வெளி நாடுகள் உள்ளிட்ட பல இடங்களுக்கும் ஊர் சுற்றி பார்க்க கிளம்பி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.