"1 சீட் கேட்டிருக்கோம்".. திமுகவுடன் 2வது சுற்றுப் பேச்சை முடித்த மனித நேய மக்கள் கட்சி!

Manjula Devi
Mar 02, 2024,05:45 PM IST

சென்னை: லோக்சபா  தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் மனிதநேய கட்சி இடையே இன்று 2வது சுற்றுப் பேச்சு வார்த்தை நடந்துள்ளது.


2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் தேதி இந்த வார இறுதியில் அதாவது மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனைகளை முடித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் திமுக கூட்டணி கட்சிகளுடன் சுமூக உடன்பாடு ஏற்பட்டு, ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொ.மா.தேவுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




இந்த நிலையில் இன்று திமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இடையேயான 2வது சுற்றுப் பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு தலைமையில் நடைபெற்றது. இதில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொது செயலாளர் ப. அப்துல் சமது, பேராசிரியர் ஹாஜாகனி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


இந்தியாவுக்கே முன்னுதாரணமான கூட்டணி


சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறுகையில்,  மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஒரு தொகுதியை கேட்டு இருக்கிறோம். 40 தொகுதிகளில் எந்த தொகுதியை கொடுத்தாலும் போட்டியிடுவோம். 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகள் கொடுக்கப்பட்டு இரண்டிலும் வெற்றி பெற்றோம். எங்களுடைய கோரிக்கையை திமுக தொகுதி பங்கீடு குழு பரிசீலிப்பதாக சொல்லி இருக்கிறது. இந்தியா முழுமைக்கும் எடுத்துக்காட்டான கூட்டணியை அமைத்திருக்கிறார் முதல்வர் என கூறினார்.


இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் இன்று 2வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.