அதிமுக - தேமுதிக; திமுக - விசிக இடையே நாளை 2ம் கட்ட பேச்சு வார்த்தை... முடிவாகுமா கூட்டணி?

Meenakshi
Mar 05, 2024,06:09 PM IST

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக- தேமுதிக இடையேயான இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நாளை நடைபெற உள்ளது. மற்றொரு புறம் திமுக - விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையேயயான கூட்டணி பேச்சுவார்த்தையும் நாளை நடைபெற உள்ளது. நாளை கூட்டணி குறித்து இறுதி முடிவு எட்டப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட அதிமுக, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறது. இதே முயற்சியில் பாஜக.வும் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக  சிறு கட்சிகளுக்கும் தற்போது முக்கியத்துவம் கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்.


நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி குறித்து தீவிரமாக பேசி வருகின்றன. கடந்த வாரம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லத்தில் சென்று அதிமுக முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி, கேபி அன்பழகன் ஆகியோர் நேரில் சென்று பேசியுள்ளனர். 




அப்பொழுது 7 மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களை உறுப்பினர் பதவி வேண்டும் என்று தேமுதிக தரப்பில் கேட்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க முடியாது என்றும், நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக கேட்கும் நான்கு தொகுதிகளை மட்டும் கொடுக்க சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் பரவின. ஆனால் 7 லோக்சபா சீட் வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல் ராஜ்யசபா பதவியையும் விட்டுக் கொடுக்க தேமுதிக தயாராக இல்லாததால் தான் கூட்டணி முடிவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 


விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், கடலூர் ஆகிய நான்கு தொகுதிகளும் கட்டாயம் வேண்டும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளாராம். இதில் விருதுநகர் தவிர மற்ற  3 தொகுதிகளையும் பாமகவும் கேட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அதிமுக-தேமுதிக இடையே கூட்டணிக்கான 2ம் கட்ட பேச்சு வார்த்தை நாளை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


நாளை நடைபெறும் 2ம் கட்ட பேச்சு வார்த்தையில்  இறுதி முடிவு தெரியும் என்றும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல் திமுக., கூட்டணியில் இணைய விடுதலத சிறுத்தைகள் கட்சியும் குறிப்பிட்ட தொகுதிகளை கேட்டு வருவதால் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது.