100 அடி உயரக் கொடிக் கம்பம்.. பிரமாண்ட அரங்கம்.. கோலாகலமாக தொடங்கியது திமுக இளைஞர் அணி மாநாடு

Su.tha Arivalagan
Jan 21, 2024,09:46 AM IST

சேலம்: சேலத்தில் திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயரக் கொடிக் கம்பத்தில் திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி திமுக கொடியேற்றி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். மாநாடு பல வகையிலும் பிரமாண்டமாக அமைந்திருப்பதால் தொண்டர்கள் உற்சாகத்துடன் அதில் பங்கேற்றுள்ளனர்.


திமுகவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 1968ம் ஆண்டு கோபாலபுரம் திமுக என்ற ஒரு பிரிவு உருவாக்கப்பட்டது. தனது வயதையொத்த இளைஞர்களுடன் இணைந்து இதை உருவாக்கினார் ஸ்டாலின். இந்தப் பிரிவுதான் பின்னாளில் இளைஞர் அணியாக உருவெடுத்தது. 1980ம் ஆண்டு மதுரை ஜான்சிராணி பூங்காவில் நடைபெற்ற திமுக மாநாட்டில் இளைஞர் அணியை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார். ஆனாலும் 1982ம் ஆண்டு வரை மு.க.ஸ்டாலினுக்கு பொறுப்பு அளிக்கப்படவில்லை. 1982ம் ஆண்டுதான் திமுக இளைஞர் அணியின் செயலாளராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.




திமுக இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக செயல்பட்ட மு.க.ஸ்டாலினின் கடும் உழைப்பு காரணமாக திமுகவிலேயே மிகவும் வலுவான அணியாக இது மாறியது. 2007ம் ஆண்டு நெல்லையில் மிகப் பிரமாண்டமான மாநில மாநாட்டை திமுக இளைஞர் அணி சார்பில் மு.க.ஸ்டாலின் நடத்தி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது 2வது மாநில மாநாடு சேலத்தில் தொடங்கியுள்ளது.


சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட வளாகத்தில் மாநாடு தொடங்கியுள்ளது. முதலில் திமுக கொடியை கனிமொழி எம்.பி ஏற்றித் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மாநாட்டு அரங்கம் திறந்து வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது 20க்கும் மேற்பட்ட தலைப்புகளில் தலைவர்கள் பேசவுள்ளனர். நீட் விலக்கு, திராவிட மாடல், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசவுள்ளனர்.




மாலையில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பேசவுள்ளனர். இறுதியாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசுவார். அத்துடன் மாநாடு நிறைவடையும்.


மாநாட்டையொட்டி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பல லட்சத்தக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் சேலத்தில் குவிந்துள்ளனர். இவர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பஸ்கள், வேன்கள் என பல வகை வாகனங்களில் சேலத்தில் குவிந்துள்ளதால் சேலமே திருவிழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது.




மாநாட்டில் கலந்து கொள்வோருக்காக தடபுடலான சாப்பாட்டு வசதியும் செய்யப்பட்டுள்ளது. 2500க்கும் மேற்பட்டோர் இணைந்து சாப்பாடு சமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பலவகையான உணவுகள் மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பரிமாறப்படவுள்ளது. சாப்பாடு தரமானதாக இருக்கும் வகையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டும் வருகிறது.


திமுக மாநாட்டையொட்டி சேலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.