ஹெப்சிபா டீச்சர் செய்த வேலை.. ஷாக்கான சேலையூர்.. மடக்கிப் பிடித்த போலீஸ்.. பரபரப்பு!

Meenakshi
Dec 22, 2023,01:39 PM IST

சென்னை: கணவனை பிரிந்த 28 வயது ஆசிரியை  17 வயது மாணவனுடன் காதல் கொண்டு, அந்த மாணவனை தனியாக அழைத்துக் கொண்டு போய், வீடு எடுத்துத் தங்கி குடும்பம் நடத்தி வந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இருவரையும் கண்டுபிடித்து மீட்ட போலீஸார், தற்போது ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


சென்னை தாழம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அந்த மாணவர். 17 வயதாகிறது. இந்த மாணவனுக்கும் அவனுக்கு பாடம் சொல்லித் தந்தை ஹெப்சிபா என்ற ஆசிரியைக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.  நாகர்கோவிலை  சேர்ந்தவர் ஆசிரியை ஹெப்சிபா. 28 வயதான இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து வந்து சென்னையில் வசிக்கிறார். இந்தப் பள்ளியில் வேலை பார்த்து வந்துள்ளார்.




ஆசிரியைக்கும்  அந்த மாணவனுக்கும் பழக்கம் இருப்பது பள்ளிக்கு தெரிய வந்துள்ளது. பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியையை அழைத்து கண்டித்துள்ளனர்.  ஆனால் ஹெப்சிபா அதைக் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து மாணவனுடன் பழகி வந்துள்ளார். இதையடுத்து ஆசிரியையை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.


அப்படியும் ஆசிரியை விடவில்லை. மாணவனை அழைத்து நாம் எங்காவது போய் விடுவோம் என்று கூறி அவனது மனதை மாற்றியுள்ளார். பின்னர் இருவரும் கோவைக்கு கிளம்பிப் போயுள்ளனர். காரமடை பகுதியில் ஒரு வீடு எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். 


இந்த நிலையில் மகனைக் காணாமல் தவித்த பெற்றோர் சேலையூர் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் விசாரணை நடத்தியதில் இருவரும் காரமடையில் தங்கியிருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார் இருவரையும் மீட்டனர். டீச்சரை, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 


பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியை இப்படி செய்யலாமா? வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது என்று பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.