தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள் விற்றால்.. கடைகளுக்கு உடனே சீல்தான்.. 247 குழுக்கள் அமைப்பு

Meenakshi
Jan 18, 2024,12:09 PM IST

சென்னை:  தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்து நடவடிக்கை எடுக்க 247 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தில் முன்பு எல்லாம் புகையிலை பொருட்களை பெரியவர்கள் மட்டும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலை தற்பொழுது மாறி பள்ளி பருவ குழந்தைகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறும் நிலை உருவாகி வருகிறது. இதில் இருந்து குழந்தைகளை காக்க அரசு பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது.


தமிழகத்தில் கடந்த சில காலமாகவே புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையை தடுக்க மாநில முழுவதும் 247 குழுக்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விதிகளுக்கு புறம்பாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலை தற்பொழுது உடனடியாக கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.




இது குறித்து அவர்கள் கூறுகையில்,  புகையிலை, போதை பாக்குகள், பான் மசாலாக்கள் உட்பட 391 வகை புகையிலை சார்ந்த பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அதற்கான தடையை மேலும் ஓர் ஆண்டு உணவு பாதுகாப்பு துறை நீட்டித்துள்ளது. கடந்த மாதத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆய்வு மேற்கொண்ட ஆய்வில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


மொத்தம் ரூ. 40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் காவல்துறையினர் நடத்திய ஆய்வில் 1500 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கு முன்பு வரை விதிகளுக்கு புறம்பாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு முதன் முதலாக ரூ. 5000மும், இரண்டாவது முறையாக ரூ. 10,000மும் விதிக்கப்பட்டது. மூன்றாவது முறை விதிகளை மீறும் போது ரூ. 25 ஆயிரம் அபராதம் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


தற்பொழுது முதன் முறையிலேயே கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல கல்வி நிறுவனங்களுக்கு  அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க 247 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.