233 பேரை பலி கொண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து.. நடந்தது இதுதான்.. அதிர வைக்கும் தகவல்கள்!

Aadmika
Jun 03, 2023,09:17 AM IST
புவனேஸ்வர் : சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்கள் அடுத்தடுத்த மோதி விபத்துக்குள்ளானதில் 233 பேர் பலியாகி உள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பெங்களூருவில் இருந்து மேற்குவங்க மாநிலம் ஹவுரா நோக்கி சென்ற சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம்  பாலசோர் மாவட்டத்தில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்துள்ளன. அதே சமயத்தில் தடம் புரண்ட பெட்டிகள் கவிழ்ந்து கிடந்த தண்டவாள வழி தடத்தில் சார்மினாரிலிருந்து சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது.



தடம் புரண்ட பெங்களூரு ரயிலின் பெட்டிகள் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதி விபத்திற்குள்ளாகி உள்ளது. மோதிய வேகத்தில் மற்றொரு தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்றின் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் போய் விழுந்து விபத்திற்குள்ளானது. இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல மாறியது. புகை மண்டலமாகவும், ரத்த வெள்ளமாகவும் காட்சி அளித்தது.

இந்த கோர விபத்து இந்தியாவிலேயே இதுவரை நடந்த ரயில் விபத்துக்களில் மிகவும் மோசமான விபத்தாக கருதப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி 233 பேர் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பல பெட்டிகள் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி உள்ளதால் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

தொடர்ந்து அப்பகுதியில் விடிய விடிய மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. ஒடிசாவை சேர்ந்த தீயணைப்பு துறை, பேரிடர் மீட்புக்ககுழு, டாக்டர்கள் குழு, போலீசார், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட குழுக்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் வரும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒடிசா மாநிலத்தில் ஒருநாள் துக்கம் அனுஷ்டிப்பதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

இந்த கொடூர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவித்துள்ளார்.