Heart Attack: மேடையில் நடனமாடிய இளம் பெண் திடீரென மயங்கி விழுந்து மரணம்.. 23 வயசுதான்!
விதிஷா, மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா நகரில், தனது சகோதரியின் திருமண நிகழ்ச்சியின்போது மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த 23 வயதுப் பெண் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு சிறிய வயதில் இப்படி ஒரு கொடுமையா என்று பலரும் சோகமாகியுள்ளனர்.
இளம் வயது மரணங்கள் இப்போது அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இளம் வயதில் மாரடைப்பு என்பது அதிகமாக உள்ளது. பல சம்பவங்களில் இதுபோன்ற மரணங்களைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர் சுருண்டு விழுந்து மரணம், நடந்து சென்று கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மரணம், வகுப்பறையில் பள்ளிச் சிறுமிக்கு இதயம் ஸ்தம்பித்து மரணம் என்றெல்லாம் செய்திகளைப் பார்த்தோம். இப்போது ஒரு திருமண நிகழ்ச்சியில் 23 வயதேயான ஒரு இளம் பெண் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ளது விதிஷா நகரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் அந்த இளம் பெண். அவரது பெயர் பரினீதா ஜெயின். 23 வயதேயான பரினீதாவின் ஒன்று விட்ட சகோதரிக்குத் திருமணம் நிச்சயம் செய்திருந்தனர். ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. இதுதொடர்பான விழா களை கட்டியிருந்தது. அங்கு போடப்பட்டிருந்த மேடையில் பலரும் நடனம் ஆடி மகிழ்வித்துக் கொண்டிருந்தனர். அப்போது பரினீதாவும் மேடையில் ஏறி டான்ஸ் ஆடினார். உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்த அவர் திடீரென அப்படியே ஸ்தம்பித்து முன்னோக்கி மடாரென கீழே விழுந்தார்.
இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஓடி வந்து பரினீதாவைத் தூக்கினர். அவரைப் பரிசோதித்துப் பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரிய வந்தது. மொத்தக் கூட்டம் இதைக் கேட்டு அதிர்ந்து போனது. கல்யாணத்திற்கு வந்திருந்தவர்களில் சில டாக்டர்களும் இருந்தனர். அவர்களும் சிபிஆர் கொடுத்துப் பார்த்தனர். ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை. அவரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரது மரணத்தை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர்.
எம்பிஏ படித்தவர் பரினீதா. தனது பெற்றோருடன் இந்தூரில் வசித்து வந்தார். இதில் என்ன கொடுமை என்றால் பரினீதாவின் சகோதரர் ஒருவரும் இதே போல இளம் வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளாராம். அதாவது அவரது 12 வயதில் இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்