உலகிலேயே மிகப் பெரிய.. 206 அடி பிரமாண்ட அம்பேத்கர் சிலை.. விஜயவாடாவில் இன்று திறப்பு!

Meenakshi
Jan 19, 2024,01:03 PM IST

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உலகிலேயே மிகப்பெரிய, 206 அடி உயரம் கொண்ட அம்பேத்கர் சிலை இன்று  திறக்கப்படுகிறது.


81 அடி உயரத்தில் பீடமும்,  அதற்கு மேல் 125 அடி உயரத்தில் சிலையும் என  மொத்தம் 206 அடியில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. 18.81 ஏக்கர் பரப்பளவில் ரூ.404.35 கோடி செலவில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைக்காக 400 டன் எடையிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் மத சார்பற்ற சிலையாக இந்த சிலை வர்ணிக்கப்படுகிறது.


சிலை அமைக்கப்பட்ட இடத்திற்கு "ஸ்மிருதி வனம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. சிலை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி வனம் முழுவதும் சுற்றுலா தளமாக மாற்றப்டுகிறது. அதற்கேற்றார் போல அந்த இடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வாக்கிங் போவதற்கும் அந்த வளாகத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. 




சிலைக்கு கீழே பி.ஆர்.அம்பேத்கர் அனுபவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அம்பேத்கரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள், காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 2000 இருக்கைகள் கொண்ட மாநாட்டு மையம், 8000 சதுர அடியில் உணவு அரங்கம், குழந்தைகள் விளையாட்டு இடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் சிலை அமைந்துள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.  


ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சிலையைத் திறந்து வைக்கவுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை அனைத்து துறைகளிலும் மாற்றி அமைத்த மாபெரும் ஆளுமை டாக்டர் அம்பேத்கர். டாக்டர் அம்பேத்கரின் உணர்வை உலக முழுவதும் பரப்புவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை திறப்பு விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.