2024 லோக்சபா தேர்தல்: உ.பியில் 2019ல் கோட்டை விட்ட 14 தொகுதிகளுக்கு பாஜக "ஸ்கெட்ச்"!

Su.tha Arivalagan
Feb 19, 2023,03:54 PM IST
லக்னோ: 2019 லோக்சபா தேர்தலின்போது உத்தரப் பிரதேசத்தில் தோல்வியைத் தழுவிய 14 தொகுதிகளை வரும் 2024 லோக்சபா தேர்தலில் எப்படி வெல்வது என்ற உத்திகளில் பாஜக இப்போதே இறங்கி விட்டது.

2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு கட்சிகள் இப்போதே தயாராக ஆரம்பித்து விட்டன. தேர்தலை மனதில் வைத்து பாஜக பல்வேறு திட்டங்களைத் தீட்டி ஏற்கனவே களம் இறங்கி விட்டது. அதன் முக்கியத் தலைவர்கள் பலரும் தேர்தலை மனதில் வைத்து பேச ஆரம்பித்து விட்டனர்.



இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஒரு அதிரடித் திட்டத்தில் இறங்கியுள்ளது. உ.பியில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. சமாஜ்வாடி கட்சிக்கு 5 தொகுதிகளும், அனுப்பிரியா சிங் தலைமையிலான ஏடிஎஸ் கட்சிக்கு 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைத்தது.

இதில் அனுப்பிரியா சிங் பாஜக கூட்டணியைச் சேர்ந்தவர் ஆவார். அவர் தவிர்த்துப் பார்த்தால் 16 தொகுதிகளில் பாஜக அல்லாத  கட்சிகள் வென்றன. அதில் 14 தொகுதிகளில் பாஜக தோல்வியைத் தழுவியது. மற்ற 2 தொகுதிகளில் அதன் கூட்டணிக் கட்சிகள் தோற்றன.

இந்த நிலையில் வரும் 2024 தேர்தலில் இந்த 14 தொகுதிகளையும் சேர்த்து  வெல்ல பாஜக திட்டம் தீட்டிக் களம் இறங்கியுள்ளது. இதற்காக நான்கு மத்திய  அமைச்சர்களை அது களம் இறக்கியுள்ளது.  இவர்கள் கடந்த தேர்தலில் பாஜக தோல்வியுற்ற 14 தொகுதிகளிலும் தற்போதைய நிலவரம் என்ன, அங்கு கட்சிக்கு எதிராக உள்ளவை எவை, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வு நடத்தி மேலிடத்திற்கு அறிக்கை கொடுக்கவுள்ளனர். அதன் அடிப்படையில் இந்தத் தொகுதிகளில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையை பாஜக மேற்கொள்ளவுள்ளதாம்.

கடந்த தேர்தலில் உ.பியில் பாஜக தோல்வியுற்ற தொகுதிகள்: பிஜ்னூர், அம்ரோஹா, மொராதாபாத், சம்பல், ரேபரேலி, கோசி, லால்கஞ்ச், ஜான்பூர், அம்பேத்கர்நகர், காஸிப்பூர், ஸிராவஸ்தி, மைன்பூரி, சஹரன்பூர், நாகினா. இதில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெற்றி பெற்றிருந்தார். அமேதியில் ராகுல் காந்தியை வெல்ல முடிந்த பாஜகவால், ரேபரேலியில் சோனியா காந்தியை வீழ்த்த முடியாமல் போயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.