நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. வன்முறை தலைவிரித்தாடும் மணிப்பூரில் மட்டும் ரத்து!

Su.tha Arivalagan
May 07, 2023,11:47 AM IST
டெல்லி: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறவுள்ளது. வன்முறை மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நீட் தேர்வை நடத்துகிறது. இளங்கலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தகுதி நுழைவுத் தேர்வு இது.  இந்தத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரை நாடு முழுவதும் நடைபெறுகிறது.

தேர்வு நடைபெறும் மையங்களுக்கு பிற்பகல் 1.30க்குள் சென்று விட வேண்டும். அதன் பிறகு வந்தால் கண்டிப்பாக மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 லட்சம் மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுதவுள்ளனர்.




தமிழ்நாட்டில் இந்த முறை 1.47 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதவுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5000 பேர் அதிகமாகும். தமிழ்நாட்டில்தான் நாட்டிலேயே அதிக அளவாக 11,575 மருத்துவ இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வை தமிழ், ஆங்கிலம் உள்பட மொத்தம் 13 மொழிகளில் எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கு வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆடைக்கட்டுப்பாடும் இதில் முக்கியமானது. 

மணிப்பூரில் மட்டும்  ரத்து

பாஜக ஆட்சி நடந்து வரும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப் பெரிய கலவரம் வெடித்துள்ளது. அங்கு கலவரமும், வன்முறையும் தலைவிரித்தாடுவதால் அந்த மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  அங்கு நிலைமை சகஜமானதும் தேர்வு நடத்தப்படும் என்று தெரிகிறது.


தமிழ்நாடு முழுவதும்.. The Kerala Story படக் காட்சிகள் ரத்து!