வானூர் அருகே.. கல்குவாரியில் வெடி வைத்தபோது.. மண் சரிந்து.. 2 தொழிலாளர்கள் பலி

Su.tha Arivalagan
Feb 08, 2024,12:24 PM IST
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கல் குவாரியில் வெடி வைத்தபோது, மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பலியானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனியாருக்கு சொந்தமான கல் குவாரியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வானூர் அடுத்த பெரும்பாக்கத்தில் ஏராளமான தனியார் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியில் உள்ள தனியார் கல்குவாரி ஒன்றில் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் மற்றும் சேலம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய இரண்டு தொழிலாளிகளும் கல்குவாரியில் வெடி வைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.



அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர்கள் மீது ஏராளமான மண் சரிந்து விழுந்து அமுக்கி விட்டது. இரண்டு பேரும் மண்ணில் புதைந்து மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள் .

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்தில் குவிந்த  பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் உடல்களை ஆம்புலன்ஸில் ஏற்ற விடாமல் கல்குவாரியின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரையிலும், உரிய நிவாரணம் வழங்கும் வரையிலும் உடல்களை இங்கிருந்து எடுக்க விடமாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு சென்ற  மயிலம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகி வருகின்றது.