சீதையைத் தேடுவது போல.. நைசாக எஸ்கேப் ஆன வானர வேடமிட்ட 2 கைதிகள்.. ராம்லீலாவில் கலகல!

Su.tha Arivalagan
Oct 13, 2024,10:40 AM IST

ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சிறையில் நடந்த ராம் லீலா நிகழ்ச்சியின்போது வானர வேடமிட்ட இரண்டு கைதிகள், சீதையைத் தேடும் காட்சியின்போது அதைப் பயன்படுத்தி சிறையை விட்டே தப்பிச் சென்றது கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.


வட மாநிலங்களில் நேற்று ராம் லீலா கொண்டாடப்பட்டது. இந்த சமயத்தில் ராமாயணத்தை வைத்து பல்வேறு நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடத்துவார்கள். இறுதியில், ராவணன் உருவபொம்மையை தீவைத்துக் கொளுத்திக் கொண்டாடுவார்கள் அங்குள்ள மக்கள். அந்த வகையில் நேற்றும் வட மாநிலங்களில் ராம் லீலா கொண்டாடப்பட்டது.


ஹரித்வாரில் உள்ள சிறையிலும் ராம் லீலா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடகத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். கைதிகளே நடித்தனர். அப்போது  சீதையைத் தேடும் காட்சி வந்தது. அந்த காட்சியில் வானர வேடமிட்ட அதாவது குரங்கு வேடமிட்ட இரு கைதிகள் நைசாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அவர்களது பெயர் பங்கஜ் மற்றும் ராஜ்குமார் எனத் தெரிய வந்துள்ளது.




அந்தக் காட்சி முடிந்தபோதுதான் இரு கைதிகளும் தப்பியது தெரிய வந்தது. இதையடுத்து சிறை காவலர்கள் உஷார்படுத்தப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.   தப்பி ஓடிய கைதிகளில் பங்கஜ், ரூர்க்கியைச் சேர்ந்தவர். கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஆவார். ராஜ்குமார், கோண்டாவைச் சேர்ந்தவர். இவர் கடத்தல் வழக்கில் கைதாகி விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தவர்.


கும்பகர்ணணன் வேடமிட்டவர் நெஞ்சு வலியால் மரணம்


இதற்கிடையே, தெற்கு டெல்லியில் உள்ள சிராக் டில்லி பகுதியில் ஒரு ராம்லீலா நிகழ்ச்சி நடந்தது. அதில் கும்பகர்ணன் வேடமிட்டு நடித்த 60 வயது நபர் நெஞ்சு வலி ஏற்பட்டு மேடையிலேயே மரணமடைந்தார்.


அந்த நபரின் பெயர் விக்ரம் தனேஜா. பாச்சிம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர். நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.  சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் இறந்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்