ஒரு தொகுதி போதும்னு சொன்ன தினகரன்.. இல்லல்ல.. இரண்டா வச்சுக்கங்க.. கையில் திணித்த பாஜக!

Meenakshi
Mar 20, 2024,06:32 PM IST

சென்னை: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு இரண்டு தொகுதிகள் ஓதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


தான் ஒரு தொகுதியே போதும் என்று கூறியதாகவும், பாஜதான் தங்களுக்கு 2 தொகுதிகளைக் கொடுத்ததாகவும், அதுவே போதுமானது என்று நிறைவாக வாங்கிக் கொண்டதாகவும் கூறியுள்ளார் தினகரன்.


லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொரு கட்சியினை சேர்ந்தவர்களும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். யாருக்கு எத்தனை தொகுதிகள் யார் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளனர் என்ற அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வந்து கொண்டுள்ளன. தேர்தல் திருவிழா தற்பொழுது களைகட்டத் தொடங்கி விட்டது  என்றே சொல்லலாம். 




இந்நிலையில், மக்களவை தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜகவுடன் டிடிவி தினகரன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அவரது கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி பாஜக உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இது குறித்து டிடிவி தினகரன் பேசுகையில், பாஜக கூட்டணியில் நான் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. எந்த நிர்பந்தமும் எனக்கு கிடையாது. தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினோம்.


அமமுக வளர்ந்து வரக்கூடிய கட்சி, நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதைத் தான் விரும்புகிறார்கள் என்று முன்னரே தினகரன் அறிவித்திருத்தார்.பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இன்று பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நான் ஒரு தொகுதியே போதுமானது என்றேன். அவர்கள்தான் 2 தொகுதிகளாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி இரண்டு தொகுதிகளைக் கொடுத்துள்ளனர்.


நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. எந்தெந்தத் தொகுதிகள் என்பதை பாஜக அறிவிப்பது தான் நியாயமாக இருக்கும். ஒரு அணிலை போல பிரதமர் மோடிக்கு உதவுவேன். நாங்கள் அம்மா என்ற திராவிட பாரம்பரியத்தில் பரினாம வளர்ச்சி என்பது அனைவருக்கும் தெரியும். இங்க பிறந்தவர்கள் எல்லாரும் திராவிடர்கள் தான் என்றார் அவர்.


பாஜக கூட்டணியில் இதுவரை முடிவாகியுள்ள தொகுதிப் பங்கீடு விவரம்:


பாமக  -10

அமமுக - 2

புதிய நீதிக் கட்சி  - 1

இந்திய ஜனநாயகக் கட்சி  - 1

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - 1