காதலுக்காக எல்லை தாண்டி வந்து கைதியான பாகிஸ்தான் இளம்பெண்!

Aadmika
Jan 24, 2023,09:27 AM IST
பெங்களூரு : போலியான ஆவணங்களை காட்டி, இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கி இருந்த பாகிஸ்தானை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். 



இக்ரா ஜீவானி என்ற அந்த பெண் இந்திய - நேபாள எல்லை வழியாக கடந்த ஆண்டு இந்தியாவிற்குள் வந்தது தெரிய வந்துள்ளது. அந்த பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், உத்திர பிரதேசத்தை சேர்ந்த 25 வயது இளைஞரான முலாயம் சிங் யாதவ் என்பவரை திருமணம் செய்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். முலாயம் சிங் யாதவ், செக்யூரிட்டியாக பணி புரிவதாகவும், இருவருக்கும் கேம் விளையாடும் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர். நேபாளத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன் அப்பெண் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வந்துள்ளார். அங்கு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, இந்திய - நேபாள எல்லை வழியாக இந்தியாவிற்குள் வந்துள்ளது. 

இக்ராவை முதலில் பீகார் அழைத்துச் சென்ற முலாயம் சிங், பிறகு பெங்களூரு அழைத்து வந்துள்ளார். அங்கு செக்யூரிட்டியாக பணிக்கு சேர்ந்துள்ளார் முலாயம் சிங். இவர்கள் இருவரும் ஜூன்னாசந்திரா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். இக்ரா ஜீவானியின் பெயரை, ரவா யாதவ் என மாற்றி ஆதார் கார்டும் வாங்கி உள்ளனர். அதில் முலாயம் சிங்கின் மனைவி என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த ஆதார் கார்டை வைத்து இக்ராவிற்கு இந்திய பாஸ்போர்ட் வாங்கவும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இக்ரா ஜீவானி யார் என்பது பற்றிய உண்மை தகவல்கள் புலனாய்வு துறையின் விசாரைணயில் அம்பலமானது. பாகிஸ்தானில் உள்ள இக்ராவின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு அவரை பாகிஸ்தானிற்கு திருப்பி அனுப்பி வைக்க முயற்சி நடந்து வருகிறது. புலனாய்வுத்துறை அளித்த தகவலின் பேரில் பெங்களூரு போலீசார் அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி உள்ளனர். அவர்கிடம் விசாரைண நடத்தி, தகவல்கள் உண்மை தான் என்பது உறுதியானதால் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது இக்ரா, வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, பிறகு கர்நாடக பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இந்த வழக்கில் விசாரைண நடத்தப்பட்டு வருகிறது. முலாயம் சிங் யாதவும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டினரை சட்ட விரோதமாக தங்க வைத்ததற்காக இவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.