19 வயதுதான்.. டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்த மாணவனுக்கு மாரடைப்பு!

Su.tha Arivalagan
Sep 17, 2023,03:49 PM IST

காஸியாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் 19 வயதேயான கல்லூரி மாணவன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜிம் ஒன்றில் டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அந்த மாணவனுக்கு மாரடைப்பு வந்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்வளவு சின்ன வயதில் மாரடைப்பு வரும் அளவுக்கு அவருக்கு உடலில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறப்படுகிறது. பிறகு எப்படி மாரடைப்பு ஏற்பட்டது என்று தெரியவில்லை.




அந்த மாணவரின் பெயர் சித்தார் குமார் சிங். கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சரஸ்வதி விஹார் பகுதியில் உள்ள ஜிம்முக்கு இவர் உடற்பயிற்சி செய்யச் செல்வது வழக்கம். சம்பவத்தன்றும் அந்த மாணவன்  உடற்பயிற்சிக்கு சென்றிருந்தார். அப்போது டிரெட்மில்லில் அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு கடுமையான நெஞ்சு வலி வந்துள்ளது. அப்படியே சிறிது நேரம் சமாளிக்கப் போராடியவர் பின்னர் அது முடியாமல் அப்படியே மயங்கிச் சரிந்தார்.


உடனடியாக அருகில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து அவரை எழுப்ப முயற்சித்தனர். பிறகு அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சித்தார்த் குமார் சிங்கைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்து விட்டதாக தெரிவித்தனர்.

மிகவும் இளம் வயதில் இப்படி மாரடைப்பு ஏற்பட்டு மாணவன் மரணமடைந்த சம்பவம் காஸியாபாத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.  சித்தார்த் குமார் சிங்கின் தந்தை நொய்டாவில் வேலை பார்த்து வருகிறார். தாயார் ஒரு டீச்சர். பீகாரில் அரசுப் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு ஒரே மகன் சித்தார்த் குமார் சிங்.

என்ன கொடுமை என்றால், ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வதற்கு பத்து நிமிடத்திற்கு  முன்புதான் தனது தாயாரிடம் பேசியுள்ளார் சித்தார்த் குமார் சிங்.