நேபாளத்தில் விபரீதம்.. 19 பயணிகளுடன் சென்ற விமானம்.. விழுந்து நொறுங்கி 18 பேர் பலி!

Meenakshi
Jul 24, 2024,04:56 PM IST

காத்மாண்டு:   நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியாகியுள்ளனர்.


நேபாளம் தலைநகர் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டது. காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது. ஓடுதளத்தில் சென்ற போது ஓடுபாதை சறுக்கி விமானம் விபத்துக்குள்ளானது. ஒடுபாதையில் சறுக்கிய விமானம் சில மணி துளிகளில்  தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர  விபத்தில் 18 பேர் உடல் கருகி பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.




இந்த விபத்து குறித்து அறிந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விமான விபத்தால் காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமானத்தில் பணியாளர்கள் உட்பட 19 பேர் இருந்த நிலையில், அவர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது.இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில் , தீயை அணைத்து மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில், 18 பேர்களின் உடல்  கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. விமானி மணிஷ் ஷக்யா படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நேபாளத்தில் கடந்த 2010ம் ஆண்டு முதல் 12 விமான விபத்துக்கள் நடந்துள்ளன. நேபாள நாட்டில் விமான விபத்து என்பது அடிக்கடி நடைபெற்று வருகிறது. சராசரியாக ஆண்டுக்கு ஒரு விமான விபத்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.