மகனிடம் போன் பேசி விட்டு.. குளிக்கப் போன தாய்.. திரும்பி வந்து பார்த்தால்.. பெரும் சோகம்!

Su.tha Arivalagan
Jan 16, 2023,02:53 PM IST

டோரன்டோ: தனது 17 வயது மகனுடன் தொலைபேசியில் பேசி விட்டு, குளிக்கப் போனார் அவரது தாய். குளித்து விட்டுத் திரும்பி வந்தபோது, அந்த மகன் சாலை விபத்தில் பரிதாபமாக பலியான செய்தி வந்து குடும்பமே அதிர்ந்து போய் விட்டது.


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் லாங்லி நகரில் உள்ள பிரேசர் ஹைவேயில் ஒரு பெரும் சாலை விபத்து நடந்தது. அதில் 17 வயதான சீக்கிய இளைஞர் ஒருவர் பலியானார். இவர்தான் அந்தக் காரை ஓட்டி வந்தவர். விபத்து நடந்த சமயத்தில் அங்கு பெரும் மழை கொட்டி வந்தது. வேகமாக வந்த கார், தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.


கார் மோதிய வேகத்தில்அந்த தடுப்பு தகர்ந்து போனது, அங்கிருந்த மரமும் வேரோடு பிடுங்கிக் கொண்டு வந்து விட்டது. காரை ஓட்டி வந்தவர் பெயர் டாரேன் லால்.  இந்த விபத்து குறித்து அவரது தாயார் சரப்ஜித் நனாரா லால் உருக்கமாக கூறிய தகவல்:


சம்பவ தினத்தன்று எனது மகன் எனக்கு போன் செய்தான். அவனிடம் பேசி விட்டு நான் குளிக்கப் போய் விட்டேன். குளித்து முடித்து விட்டுத் திரும்பிவந்தபோது எனது கணவர் போனில் பேசிக் கொண்டிருந்தார். எனது மகன் விபத்தில் சிக்கி இறந்த தகவலை அவர் கேட்டுக் கொண்டிருந்தார். என்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை.


சம்பவத்தன்று பெரிய மழை பெய்து கொண்டிருந்தது. அதுதான் விபத்துக்கான காரணமாக இருக்க முடியும் என நான் நம்புகிறேன். வேறு காரணம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  எனது மகன் நன்றாகப் படிக்கக் கூடியவன். விளையாட்டில் ஆர்வம் கொண்டவன். துறுதுறுப்பாக இருப்பான். அவன் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்றார் அவர்.