150 மில்லியன் டவுன்லோடுகள்.. திரெட்ஸ் தரமான சம்பவம்.. ஆனால் யூசேஜ் குறைஞ்சிருச்சு!

Su.tha Arivalagan
Jul 18, 2023,01:03 PM IST
சான்பிரான்சிஸ்கோ: மெட்டா நிறுவனத்தின் திரெட்ஸ் ஆப் தொடர்ந்து அதிக அளவில் டவுன்லோடு செய்யப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 150 மில்லியன் டவுன்லோடுகள்  நடந்துள்ளன. ஆனால் அதன் பயன்பாடு குறைந்து வருகிறதாம்.

ஜூலை 5ம் தேதி திரெட்ஸ் செயலியை மெட்டா அறிமுகப்படுத்தியது. டிவிட்டருக்கு மாற்றாக இது கருதப்பட்டது. இதுதொடர்பாக மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பர்க் ஒரு டிவீட்டும் போட்டு எலான் மஸ்க்கை சீண்டியிருந்தார். இதனால் திரெட்ஸ் அறிமுகமானதும் அது சூடாக பரவத் தொடங்கியது. உலகெங்கும் டவுன்லோடுகள் களை கட்டின.



ஆப் செயல்பாட்டுக்கு வந்து ஒரு வாரமாகியுள்ள நிலையில் இதுவரை 150 மில்லியன் டவுன்லோடுகள் நடந்துள்ளன.  இந்தியாவில்தான் அதிக அளவிலான திரெட்ஸ் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. அடுத்து பிரேசில் நாட்டில் அதிக டவுன்லோடுகள் நடந்துள்ளன. 3வது இடத்தில்தான் அமெரிக்கா உள்ளது.

மொத்த திரெட்ஸ் டவுன்லோடுகளில் இந்தியாவில் மட்டும் 32சதவீதம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். பிரேசில் நாட்டில் 22 சதவீதமும், அமெரிக்காவில் 16 சதவீதமும் டவுன்லோடுகள் நடந்துள்ளன.  இவற்றுக்கு அடுத்த இடங்களில் மெக்சிகோ, ஜப்பான் ஆகியவை வருகின்றன.

ஆனால் இத்தனை பேர் டவுன்லோடு செய்திருந்தாலும் கூட அதன் பயன்பாடு குறைந்து வருகிறதாம். அதாவது டவுன்லோடு செய்து வைத்துக் கொண்டு அதைப் பயன்படுத்தாமல் பலர் உள்ளனராம். இது டிவிட்டர் போல எளிமையாக, கையாளுவதற்கு சுலபமாக இல்லை என்பதே முக்கியக் காரணம்.