சென்னை மழை.. முழு வீச்சில் நிவாரணப் பணிகள்.. 15 ஐஏஎஸ் அதிகாரிகள் களத்தில்.. !

Su.tha Arivalagan
Nov 29, 2023,10:27 PM IST

சென்னை: சென்னை மற்றும் 3 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் பள்ளி, கல்லூரிகள் நாளை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே, சென்னையில்  மழை நிவாரணப் பணிகளில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் களம் இறக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள், மேயர் பிரியா உள்ளிட்டோரும் நேரடியாக களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.


சென்னை மற்றும் வட மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை விட்டு விட்டு  வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் வெள்ளக்காடாகி விட்டது. குறிப்பாக புறநகர்களில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் போல மழை நீர் தேங்கியது. பல இடங்களில் வீடுகளிலும் தண்ணீர் தேங்கியது.


சென்னையிலும் பல பகுதிகளில் நீர் தேங்கியது. சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் தேங்கியது. மாலையிலும் விடாமல் மழை பெய்து வந்ததால் பல பகுதிகளில் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்தது.




மழை நிவாரணப் பணிகளில் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், அமைச்சர்களும் இறங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி கவுன்சிலர்கள், மேயர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரடியாக களத்தில் இறங்கி மழை நீர் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.


சென்னை நகரில் இரவு நேரத்தில் கன மழை பெய்யலாம் என்பதாலும் பெரும்பாலான பகுதிகளில் முழுமையாக வெள்ள நீர் வடியாமல் உள்ளதாலும் தேவையின்றி வெளியில் வருவதை மக்கள் தவிர்க்குமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


நாளை மிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும், திருவள்ளூரில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


உதவி எண்கள் அறிவிப்பு:




சென்னை மாநகராட்சிப் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் 1913 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இதேபோல 044-25619204, 044-25619206, 044-25619207 ஆகிய எண்களையும் தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


இதுதவிர 9445477205 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.