அதிமுகவை உடைக்க ஆரம்பிக்கிறதா பாஜக?.. 14 மாஜி எம்எல்ஏக்கள் அதிரடியாக பாஜகவில் இணைந்தனர்!

Su.tha Arivalagan
Feb 07, 2024,06:23 PM IST

டெல்லி: அதிமுகவைச் சேர்ந்த 14 முன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட 18 பேர் இன்று டெல்லி பாஜக தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதன் மூலம் அதிமுக கோட்டைக்குள், பாஜக ஓட்டையைப் போட ஆரம்பித்துள்ளதா என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது.


அதிமுக பாஜக கூட்டணியில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டு இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம்உள்ள திரும்பி நிற்கின்றனர்.  இந்தக் கூட்டணியை மீண்டும் இணைக்க ஒரு முயற்சி நடந்து வருகிறது.  ஆனால் அதற்குப் பலன் கிடைக்குமா என்று தெரியவில்லை.


கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறோம் என்று அமித்ஷா பேட்டி கொடுத்தால், உடனே அவங்க வேண்டுமானால் திறந்து வைத்துக் கொள்ளட்டும், நாங்க அடைச்சுட்டோம் என்று டி. ஜெயக்குமார் அதிரடியாக பதிலளிக்கிறார்.


இந்த நிலையில் டெல்லியில் இன்று ஒரு அதிரடி நிகழ்வு நடந்துள்ளது. இது அதிமுகவைக் குறி வைத்து நடந்திருப்பதால், பாஜக தனது வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டதா என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. டெல்லி பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் 14 மாஜி அதிமுக எம்எல்ஏக்கள் உள்பட 18 பேர் பாஜகவில் இணைந்தனர்.




இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இன்று கட்சியில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பி ஆகியோர் நீண்ட காலத்துக்கு முன்பு மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்கள்.


பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் பட்டியல்:


சின்னசாமி

துரைசாமி

தங்கராசு 

சேலஞ்சர் துரை

கு வடிவேல்

கந்தசாமி

கோமதி சீனிவாசன்

எஸ்.எம்.வாசன்

முத்துக்கிருஷ்ணன்

பி.எஸ்.அருள்

என். ஆர்.ராஜேந்திரன்

குருநாதன்

வி.ஆர்.ஜெயராமன்

பாலசுப்ரமணியன்

சந்திரசேகர் 


முன்னாள் எம்பி:


எம்.வி.ரத்தினம்


அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மக்கள் பிரதிநிதிகளை கட்சியில் இணைத்துள்ளதன் மூலம் அதிமுகவுக்கு ஒரு மெசேஜை பாஜக விடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. கூட்டணி அமைந்தால் கட்சி தப்பும், இல்லாவிட்டால் இதுபோல பலர் இழுக்கப்படுவார்கள் என்ற மெசேஜாக அது பார்க்கப்படுகிறது. 


பாஜக எந்த அளவுக்கு போகும், அதிமுக என்ன மாதிரி செய்து சேதத்திலிருந்து தப்பும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.