டெல்லி கேபிடல்ஸ் கேப்டன்.. ரிஷப் பந்த்துக்கு ரூ. 12 லட்சம் அபராதம்.. எதற்கு தெரியுமா?

Meenakshi
Apr 01, 2024,02:46 PM IST

விசாகப்பட்டினம்: ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக கூறி டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த்திற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


இந்திய பிரிமீயர் லீக் ஐபிஎல் 20 தொடரின் 17ஆவது சீசன் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை குவித்தது.




டேவிட் வார்னர்-ப்ரீத்வி ஷா  அதிரடியாக ஆடி, முதல் விக்கெட்டிற்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். இதில் டேவிட் வார்னர் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 52 ரன்கள் குவித்தார். கேப்டன், ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்து 51 ரன்களை சேர்த்தார். 


பின்னர் சேசிங்கில் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அஜிங்கியா ரஹானே 45 ரன்களையும், டேரில் மிட்செல் 34 ரன்களையும் எடுக்க, இறுதியில் தோனி 37 ரன்களையும் சேர்த்ததை அடுத்து 20 ஓவர்களில் 171 ரன்களை எடுத்தது. இதன் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி  20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 


இப்போட்டியில் டெல்லி அணி கேப்டன் ரிஷப்  பந்த் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக கூறி, ஊதியத்தில் 12 லட்சம் ரூபாய் பிடித்துக் கொள்ளப்படும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.