8வது திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் 112 வயது பாட்டி.. ஒரு "ஆல் த பெஸ்ட்" சொல்லலாமே!

Meenakshi
Jan 13, 2024,05:36 PM IST

கோலாலம்பூர்: மலேசியாவைச் சேர்ந்த 112 வயது பாட்டி ஒருவர், 8வது திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடி வருகிறாராம்.


தற்பொழுது எல்லாம் 40 வயதை கடைந்தாலே என்னடா வாழ்க்கை என்று தோன்றுகிறது. உட்கார்ந்து எழுந்தா இடுப்பு வலி.. கொஞ்ச தூரம் நடந்தாலே மூட்டு வலி.. வெறும் காபிதான்.. காரணம் சுகர்!.. வேகமா நடந்தா மூச்சு வாங்கும்.. இப்படி  பல வியாதிகளுடன்தான் பலரும் வாழ்ந்து கொண்டுள்ளனர். வயது கூட கூட பல பிரச்சனைகள் தானாவே வந்து விடுகின்றன.


ஆனால் மலேசியாவைச் சேர்ந்த சிட்டி ஹவா ஹுசின் என்ற 112 வயது பாட்டி எல்லோரையும் அதிசயிக்க வைத்துள்ளார்.  இவருக்கு ஏற்கனவே 7 முறை கல்யாணமான நிலையில் தற்போது 8வது முறையாக திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக கூறி இளசுகளை அதிர வைத்துள்ளார். 


ஆத்தாவுக்கு என்ன கவலைன்னா.. தனக்கு அதிக வயசாகி விட்டதால், சரியான மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்பதுதான்! .. "எப்புர்ரா" என்று நமக்கெல்லாம் ஒரு அயர்ச்சியா வருதுல்ல..  பாட்டியோட மத்த கதையையும் கேளுங்க பாஸ்!




மலேசியாவை சேர்ந்த இந்த பாட்டியம்மாவின் பெயர் சிட்டி ஹவா ஹுசின். 112 வயதாகிறது. மலேசியாவில் உள்ள தும்பட் என்ற பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 7  முறை திருமணம் நடந்துள்ளது. 7 கணவர்களில் சிலர் உயிருடன் இல்லையாம். ஒன்னு, ரெண்டு பெருசுகதான் இருக்காம். அவர்களுக்கும், இவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாம். இந்தப் பாட்டிம்மாவுக்கு 5 குழந்தைகள், 19 பேரக்குழந்தைகள் மற்றும் 30 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர்.


தற்போது 58 வயதாகும் அவரது இளைய மகனுடன் வாழ்ந்து வருகிறார் சிட்டி ஹவா. தனது நீண்ட ஆயுளுக்கு எந்த ரகசியமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஒரு போதும் உணவை எடுத்துக்கொள்ள தவறியதே கிடையாதாம். அளவிற்கு அதிகமாகவும் உணவு எடுத்துக் கொண்டதும் இல்லையாம். உணவில் வெள்ளை அரிசியும், தண்ணீரும் மட்டுமே எடுத்துக்கொள்வாராம் பாட்டியம்மா.


தனக்கு சின்னதாய் பார்வை குறைபாடு மட்டும் இருப்பதாகவும். மற்றபடி தனது வேலைகளை தானே சுறுசுறுப்பாக செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், எனது  முன்னாள் கணவர்கள் சிலர் இறந்து விட்டனர். மற்றவர்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நாங்கள் விவாகரத்து பெற்றோம். 


இப்போது நான் தனிமையில் இருக்கின்றேன். எனக்கு திருமணம் செய்து கொள்ள மணமகன் தேவை என்று கூறியுள்ளார். இந்த பாட்டியம்மா தற்போது மணமகன் தேடி வரும் சம்பவம் தான் இணையதள பக்கங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. யாராச்சும் நல்ல மாப்பிள்ளை இருந்தீங்கன்னா டக்குன்னு அப்ளிகேஷன் போட்டுப் பாருங்க.. பாட்டிக்குப் பிடிச்சிருந்தா.. சட்டுப்புட்டுன்னு கல்யாணத்தை முடிச்சுக்கலாம்!


அப்புறம் பிரண்ட்ஸ்... பாட்டிம்மாவிற்கு ஒரு ஆல் த பெஸ்ட் சொல்லலாமே..!