"நம்பர் 108".. உயிர் காக்கும் தோழன்.. முதலுதவி எப்படி செய்வது .. சூப்பர் டெமோ!

Su.tha Arivalagan
Sep 02, 2023,09:58 AM IST
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கம் நடுநிலைப் பள்ளியில் 108 ஆம்புலன்ஸ்  செயல்பாடு குறித்து மாணவர்களுக்கு அருமையான செயல் விளக்கம் தரப்பட்டது.

தேவகோட்டை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்கம் நடுநிலைப் பள்ளியில் 108 வாகனம் செயல்பாடுகள் தொடர்பாக முதலுதவி குறித்து நேரடி செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் லே. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். 108 வாகனம் ஒருங்கிணைப்பாளர் சிவா முன்னிலையில் வாகன பொறுப்பாளர்கள் தினேஷ் மணி, பிரியங்கா, மருது பாண்டியன், மதியழகன் செயல் விளக்கம் அளித்தனர்.



முதலுதவி எப்படி செய்வது என்பது தொடர்பாக செயல்முறை விளக்கம் அளித்தனர். 108 வாகனம் செயல்பாடுகள் தொடர்பாகவும் மாணவர்களுக்கு முழுமையாக விளக்கப்பட்டது.

108 தொடர்பான விழிப்புணர்வு:

108 வாகன பொறுப்பாளர்கள் கூறுகையில், 108 தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் அதிகம் போய் சேர வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் தான் அதிகம் 108 குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். 108 என்ற தொலைபேசி எண் இலவசம் தான். இந்த எண்ணின் மூலம் தொடர்பு கொண்டதும் இதன் சேவை எந்த மாவட்டத்தில் இருந்தாலும் பத்து நிமிடத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது. 

எல்லா விஷயத்திற்கும் போன் பண்ணலாம். தீக்காயம், பிரசவம், காய்ச்சல், பாம்பு கடி போன்ற அனைத்திற்குமே தொடர்பு கொள்ளலாம் என்பதனை விழிப்புணர்வு மூலம் தெரியப்படுத்த வேண்டும் என கூறினர். பாம்பு கடித்தால், கடித்த இடத்தில் வாயில் உறிஞ்சி ரத்தம் எடுப்பது தவறானது. உடனே 108 வாகன சேவையை பயன்படுத்த வேண்டும் என்றும்  அறிவுறுத்தினர்.



தீக்காயம், பாம்பு கடித்தல், காய்ச்சல், வலிப்பு, கீழே விழுதல் போன்ற விபத்துகளில் எவ்வாறு முதல் உதவி செய்ய வேண்டும் என்பதையும் நேரடி செயல் விளக்கம் மூலம் ஆம்புலன்ஸ் பொறுப்பாளர்கள் விளக்கினார்கள்.

108 ஆம்புலன்ஸில் என்ன சேவையை எப்படி பயன்படுத்துவது:

108 ஆம்புலன்ஸ் சேவையில் நான்கு வகையான செயல்பாடுகள் உள்ளது.

என் கே 48 திட்டத்தின் மூலம் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டால், அவரை தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் 48 மணி நேரத்தில்  சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவார்கள் என்பதை தெரிவித்தனர்.

தற்போது மாவட்ட தலைநகரங்களில் பைக் ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் , செயற்கை சுவாச உபகரணங்கள் கொண்ட ஆம்புலன்ஸும் தற்போது செயல்பாட்டில் உள்ளது என்ற தகவலையும் தெரிவித்தனர்.
  
108 ஆம்புலன்ஸின் சேவைகள்:
         
விலை மதிப்பில்லாத உயிரைக் காக்க ஜெட் வேகத்தில் பறக்கும் ஆம்புலன்ஸ் சேவை என்றும் போற்றத்தக்கது. அவசர உதவிக்கு 108 தொடர்பு அழைத்த உடனே நாங்கள் இருக்கும் என்ற தெம்பூட்டும் 
அவர்களின் வார்த்தைகள் நமக்கு ஆறுதல் அளிக்கின்றன.

இன்று தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் 3000 ஆம்புலன்ஸ்கள் இலவச சேவையில் ஈடுபட்டுள்ளன.  உயிருக்கு போராடும் ஒருவரை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ் இன்று முதலுதவி முதல் அவசர சிகிச்சை வரை ஒரு மினி மொபைல் மருத்துவமனையாக வலம் வருகிறது.  



இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆம்புலென்சிலும் பயிற்சி பெற்ற டெக்னீசியன்கள் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், சுவாசப்பாதை போன்றவற்றை பரிசோதனை செய்து மருத்துவர்களின் அறிவுரைப்படி முதலுதவி மற்றும் சிகிச்சையும் அளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.