Sabarimalai.. 101 வயதிலும் சபரிமலை ஐயப்பனை காண வந்த வயநாடு மூதாட்டி பாருகுட்டியம்மா !
சபரிமலை : புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 101 வயதை கடந்த மூதாட்டி ஒருவர் வந்து சாமி ஐயப்பனை தரிசனம் செய்யும் ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளது பக்தர்களிடம் பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை-மார்கழி மாதங்களில் நடைபெறும் மண்டல பூஜையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி ஐயப்பனை தரிசனம் செய்து செல்வது வழக்கம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பல கி.மீ., நடந்து வந்து, வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலையில் இந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி மண்டல பூஜை காலம் நிறைவடைய உள்ளது. மண்டல பூஜைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனின் போது 37 நாட்களில் 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வயநாட்டின் மூன்னனகுழி பகுதியை சேர்ந்த பாருகுட்டியம்மா என்ற 101 வயது மூதாட்டி, தன்னுடைய கொள்ளு பேரன் பேத்தி உள்ளிட்ட குடும்பத்தினருடன் சபரிமலை வந்து ஐயப்பனை தரிசனம் செய்துள்ளார். சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் வரக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. பாருக்குட்டி அம்மாவிற்கும் சிறு வயது முதலே சபரிமலை வந்து ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் சிறு வயதில் அவரது ஆசை நிறைவேறவில்லை. தற்போது தன்னுடைய 101வது வயதில் ஐயப்பனை தரிசிக்கும் தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளார்.
1923ம் ஆண்டு பிறந்த பாருகுட்டி அம்மா, கடந்த ஆண்டு தன்னுடைய 100வது வயதில் முதல் முறையாக சபரிமலை வந்து, ஐயப்பனை தரிசனம் செய்துள்ளார். இந்த ஆண்டு 2வது முறையாகவும் சபரிமலை வந்துள்ளார். அடுத்த ஆண்டும் சபரிமலைக்கு மாலை அணிந்து, விரதம் இருந்து வர விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். டோலி மூலம் சபரிமலை வந்தடைந்த பாருகுட்டி அம்மா பதினெட்டாம் படி ஏறி வந்து, ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தள்ளாத வயதில் பதினெட்டாம் ஏறுவதற்கு போலீசார் அந்த மூதாட்டிக்கு உதவி உள்ளனர். சாமி ஐயப்பன் மீதான பாருகுட்டி அம்மாவின் பாசமும், பக்தியும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்