கர்நாடகாவிலிருந்து.. டேங்கர்கள் மூலம்.. திருப்பதிக்கு வந்தது 10 லட்சம் லிட்டர் நெய்!

Manjula Devi
Sep 25, 2024,04:56 PM IST

திருப்பதி:  திருப்பதியில் லட்டு தயாரிப்பதற்காக கர்நாடகத்திலிருந்து 10 லட்சம் லிட்டர் நெய் வந்து சேர்ந்துள்ளது.


திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் வழங்கப்படும் லட்டுவை பக்தர்கள் புனித பிரசாதமாக  கருதுகின்றனர். ஆனால், அங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்துவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். இந்த சம்பவம் திருப்பதி கோவில்  மட்டும் இன்றி ஆந்திர அரசியலிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.




கடந்த ஜூலை 17ஆம் தேதி குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு துறை அலுவலகத்தில் திருப்பதி லட்டு  சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அதில் நெய்க்கு பதிலாக மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், உள்ளிட்ட பொருட்கள் கலக்கப்பட்டு இருப்பதாக ஆய்வறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. அதோடு தரமில்லாத நெய் அனுப்பியதாக தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர். டைரி நிறுவனத்தின் பெயரையும் தெரிவித்திருந்தது திருப்பதி தேவஸ்தானம். இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத்திற்கு களங்கம் விளைவித்து விட்டதாக பக்தர்கள் கூறி வந்தனர்.


இந்த நிலையில் தற்போது திருப்பதி கோவிலின் புனிதத்திற்கு களங்கம் ஏற்பட்ட நிலையில் அதனைப் போக்க ஆகம விதிகளின்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலை தூய்மைப்படுத்தி புனித நீர் தெளிக்கப்பட்டு மூன்று நாட்கள் யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனை  தொடர்ந்து கோவில் ஜீயர்கள், வேத பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் ஆகியோர்கள் இணைந்து மகா சாந்தி யாகம், சாந்தியாகும் மகா சம்ராக்ஷண யாகம் நடத்தினர்.


இந்நிலையில், லட்டு தயாரிப்புக்காக கர்நாடக அரசின் பால் உற்பத்தி நிறுவன நெய்யை கொள்முதல் செய்தது திருப்பதி தேவஸ்தானம். கர்நாடகாவில் இருந்து அந்த 10 லட்சம் லிட்டர் நெய் திருப்பதிக்கு டேங்கர்கள் மூலம் வந்து சேர்ந்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்